பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களின் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது.
அன்றாட உலக வாழ்வில் பெற்றோர் பெறும் தலைசிறந்த பேறு ‘‘அறிவுடைய நன்மக்கட் பேறாகும்.’’ அறிவைக் கற்பதால்தான் நாம் அதனைப் பெறலாம். பெற்றோரிடமும், குழந்தையிடமும் இயல்பாகவே அன்பு இருக்கின்றது. பிள்ளையைப் பாதுகாக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வை இயற்கை பெற்றோரின் முனையில் இயல்பாகவே கிரகித்து வைத்துள்ளது. ஆனால் பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு சில பிள்ளைகளிடம் இல்லை. எனவேதான் ‘‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என பழமொழி பழைய காலத்தில் தோன்றியது எனலாம்.
இளமையில் கல்வி
கல்வி கற்பதற்கு உரிய பருவம் இளமைப் பருவமாகும். இதனால்தான் ‘‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’’ என்பர். இளமைப் பருவம் வாழ்க்கையின் ஆரம்பப் பருவமாகும். குடும்ப வளம் பெற்று சிறப்புடன் திகழவும், முதுமைப் பருவத்தை அஞ்சாது எதிர்கொள்ளவும் உறுதுணையாவது இளமைப் பருவத்தில் நாம் பெறும் கல்வியாகும். கற்பதை குறைகளின்றித் தௌிவாகக் கற்க வேண்டும் என்றார் வள்ளுவர்
‘‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’’ (குறள் – 391)
கற்க வேண்டிய நூல்களை ஒருவன் குற்றம் அறக் கற்க வேண்டும். கற்ற பின்பு அந்தக் கல்விக்குத் தகுந்து ஒழுக வேண்டும் என திருக்குறளில் கல்வி அதிகாரத்தில் தன் ஈரடிகளால் மிகத் தௌிவாக வள்ளுவர் கூறியுள் ளார். ஒருவன் கல்வி அறிவுடையவன் என்பதன் சாட்சியாக அமைவது அவனது அடக்கமான பண்பாகும். இதனால்தான் அடக்கம் ஒரு மனிதனுக்குத் தரும் பரிசு தேவலோகத்தில் வாழும் பேற்றைத் தரும் என்றும் அடங்காமை வாழ்வில் ஔிமயமற்ற, சிறப்பற்ற, துன்பமான வாழ்வையே தரும் என்றும் பொய்யாமொழிப் புலவர் கூறி உள்ளார். எனவே இளம் தலைமுறையினரான மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகளில் அடக்கம் பணிவு, கீழ்படிதல் மிக முக்கியமானவை.
காலை எழுந்தவுடன் படிப்பு
‘‘எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’’ என்கிறது பாடல். தொட்டிலில் பழகிய பழக்கம் தான் சுடுகாடு மட்டும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்ற பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டுவர வேண்டும்.
பிள்ளைகளை தண்டனை மூலம் திருத்த பெற்றோரோ, ஆசிரியர்களோ முற்படக்கூடாது. அன்பினால் அறிவு கூறி, கனிவாகத் திருத்த முற்பட வேண்டும். மிரட்டுபவர்கள் மற்றும் தண்டனை கொடுப்போர் மீது பிள்ளைகள் அன்பு செலுத்தாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரால் எமது நாட்டில் கல்வியின் முன்னேற்றம் 50 வருடங்கள் பின்நோக்கிச் சென்று விட்டது என்று கூறலாம். இன்றைய பெற்றோரின் கடமை முந்தைய கால எம் கல்வியின் தரத்தை மீண்டும் கட்டி, எழுப்புவதென சபதம் செய்ய வேண்டும்.
கல்விக்காகவே எமது பெற்றோர்கள் அன்றிலிருந்து இன்று வரை முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பெறும் வருமானங்களைக் கொண்டே தமது வாழ்க்கையை சீராக நடத்துகின்றனர். எனவே எமது வீழ்ச்சிகள் எழுச்சியின் முதற்படி. எனவே எமது எதிர்கால சந்ததியினரை, எதிர்காலத் தலைவர்களை உரிய முறையில் வழிப்படுத்தி நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டியது பெற்றோர்களினதும், பாதுகாவலர்களினதும் காலத்தின் கட்டாயமான கடமையாகும்.
இன்று வீடுகளில் உள்ள இணைய த் தளங்களும், தொலைக்காட்சிகளும், அலை பேசியும், கமராக்களும் மற்றும் வௌ்ளித் திரைகளும் அதில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகளும் சில பெற்றோர்களும் பிள்ளைகளும் வௌியில் சென்று கெடும் வாய்ப்பை நிறுத்தி வீட்டில் இருந்தே கெடும்படி செய்துள்ளன. எனவே சமூக சீர்கேடான நிகழ்ச்சிகளை பெற்றோரோ, பிள்ளைகளோ பார்க்கக் கூடாது. மாணவர்களுக்கு அலைபேசிப் பாவனையை முக்கியமான தேவைக்கன்றி மற்றைய தேவைகளுக்கு பாவிக்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. தன் பிள்ளை அறிவில் விற்பன்னராகி, பெரியோரிடம் சான்றோன் என்ற பெயர் பெற வேண்டும் என்பதையே எந்தப் பெற்றோரும் விரும்புவர்.
‘‘ஈன்ற பொழுதிற் பெரி(து)உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் (குறள் – 69)
இதனையே வள்ளுவரும் மக்கட் பேறு என்ற அதிகாரத்தில் மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். பிள்ளைகளுக்கு தண்டனை வழங்காது, பிள்ளையைத் தாழ்த்திப் பேசாது நல்ல அறிவாளியாக வர பெற்றோர் வளர்க்க வேண்டும். பிழை கண்டு பிடிப்பதும், குற்றம் சொல்வதும் தமது சொந்த வழக்கமாகி விட்டார்கள் பெற்றோர். இந்த நிலை மாறவேண்டும்.
பிள்ளைகளின் திறமைகள்
நல்லவற்றையே பெற்றோர் செய்து நல்லவற்றையே பிள்ளைகளிடம் எதிர்பார்த்து நல்ல பழக்கத்தையே கற்றுக் கொடுக்க வேண்டும்.
பொதுவாகப் பார்க்குமிடத்து பிள்ளைகளின் திறமைகள் எல்லாம் முழுமையான மலர்ச்சி பெற்று வளர்வதற்கு பெற்றோரினது அன்பும் ஆதரவும் வழிகாட்டலும் மிகமிக அவசியம். அன்பும், ஆதரவும் எல்லை கடக்குமானால் அமிர்தம் நஞ்சாவது போன்று பிள்ளையின் தன்னம்பிக்கையைக் குறைத்து பாதகமான விளைகளைப் பிள்ளையின் வாழ்வில் ஏற்படுத்தி விடும்.
அப்படிப் போகவிடாமல் தம்பிள்ளைகளை விருப்பம்போல நடமாடவும் எண்ணங்களை வௌியிடவும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் முத லில் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி இலக்கியப் பற்றுடன் அமைதியாக, மகிழ்ச்சியாக நல்ல முறையில் அமைத்துக் கொண்டால் அதுவே குழந்தைக்கு எடுத்துக் காட்டாகக் கல்வியை சிறந்த முறையில் கற்க அமையும்.
பிள்ளைகளுக்கு மதிப்பு
பிள்ளைகள் அவர்களது வயதுக்கேற்ப சிந்தனை செய்யும் ஆற்றல் உண்டு. ஆனால் அதற்கு வேண்டிய வாய்ப்பையும் சுதந்திரத் தையும் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுடைய கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். பிள்ளையின் மனப்போக்கு அதன் வளர்ச்சிக்கு ஏற்றபடியே மலர்ச்சி அடைய அனுமதித்தாலே பெரியவனாகின்றபோதும் எண்ணங்கள் சரியாக மலர்ச்சி அடையும்.
புதிய கல்வித் திட்டத்தால் பழைய பாடக் கல்வித் திட்டத்தில் படித்த பெற்றோரில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடல் சொல்லிக் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். இருந்தும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு இயலுமானவரை அனுப்பி தங்களுடைய உடம்பை உருக்கி படிக்க வைக்கின்றார்கள்.
நாட்டில் உயர்ந்தவராக வரவேண்டும் என்பதே எந்தப் பெற்றோரினதும் விருப்பம். எனவே நாட்டின் எதிர்காலத்தின் தலைவர்களாக வரவேண்டிய மாணவர்கள் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மதிப்பளித்து கல்வி என்னும் பயிரில் முழுமையான இலக்கினை அடைய வேண்டுமென இறைவனை பிராத்திக்கின்றேன்.
No comments:
Post a Comment